தரம்சாலா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த ஆடுகளம் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், நியூசிலாந்து இம்முடிவை எடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மழை காலம் என்பதால் தரம்சாலா மைதானத்தில் பகலிரவு போட்டிகளை நடத்துவது இயலாத காரியமாகும். கடந்த முறை இந்தியா - நியூசிலாந்து ஆட்டத்தின் இடையிலேயே பனி சூழ்ந்து சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் தரம்சாலா மைதானத்தில் பகலிரவு போட்டிக்கு திட்டமிட்ட பிசிசிஐ நிர்வாகிகளை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதனால் இன்றைய ஆட்டம் பகலில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் ஆடுகளத்தில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை கேமரூன் க்ரீனை நீக்கிவிட்டு டிராவிஸ் ஹெட்டை சேர்த்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டாஸ் வென்ற பின் நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பேசுகையில், நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். காலை நேரம் என்பதால், முதல் சில ஓவர்கள் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். மார்க் சாப்மேனுக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆடுகளத்திற்கு ஏற்ப தகவமைத்து கொண்டு விளையாடினால் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், நல்ல பிட்ச்சாக உள்ளது. கேமரூன் க்ரீனுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் இடம்பிடித்துள்ளார். நியூசிலாந்து அணியை பற்றி எங்களுக்கும், எங்களை பற்றி அவர்களுக்கும் நன்றாக தெரியும். பெரிய இலக்கை நிர்ணயிக்க முயற்சிப்போம் என்று தெரிவித்தார். அரையிறுதி சுற்றுக்கான ரேஸில் இரு அணிகளும் முன்னிலையில் உள்ள நிலையில், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.