கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் ஓமன் அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை அன்று மோத உள்ளன. இந்தப் போட்டிக்கு முன்னதாக ஓமன் கேப்டன் ஜதிந்தர் சிங் பேசி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய அதிர்ச்சியாக, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான அந்த அணி, ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது. நட்சத்திர பந்துவீச்சாளர்களான பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் காயம் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையில் உள்ள பல்லேகலவில் நடைபெறவுள்ள கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது குறித்துப் பேசிய ஓமன் கேப்டன் ஜதிந்தர் சிங், எதிரணியின் தற்போதைய நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "நிச்சயமாக இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. எங்களது வீரர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அந்த குறிப்பிட்ட நாளில் நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதே முக்கியம். அந்தத் தருணங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் யாரையும் வீழ்த்த முடியும். தற்போது ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் இல்லை. அவர்களை நசுக்க இதுவே சரியான நேரம்." என்றார்.
ஓமன் அணி இதுவரை விளையாடிய ஜிம்பாப்வே, இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், ஒரு பெரிய அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பை வரலாற்றில் தங்களது முத்திரையைப் பதிக்க ஜதிந்தர் சிங் விரும்புகிறார்.
"ஆஸ்திரேலியாவும் தொடரை விட்டு வெளியேறிவிட்டது. நாங்கள் இதுவரை சிறந்த கிரிக்கெட்டை விளையாட முயன்றோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் எங்களது திறமையை நிரூபிப்போம்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியதற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த அணி டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதற்குப் பதிலளித்த பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, "நாங்கள் டி20 உலகக்கோப்பையை முக்கியமாகக் கருதவில்லை என்பது முற்றிலும் பொய்யான தகவல். காயங்கள் எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தன. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரே சீரான வேகத்தில் சிறப்பாகச் செயல்படுவது கடினமானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதை நாங்கள் அறிவோம், ஆனால் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம்" என்று கூறினார்.
ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கௌரவமான வெற்றியுடன் தொடரை முடிக்க ஆஸ்திரேலியாவும், அதிர்ச்சி தோல்வியளிக்க ஓமனும் மோதுவதால் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.