சிட்னி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மண்ணில் கைப்பற்றிய நிலையில், டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில், 2வது ஆட்டம் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் இங்லிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய மேத்யூ ஷார்ட் - மெக்கர்க் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக ரன்களை குவித்தது.
3.4 ஓவர்களில் 52 ரன்கள் குவித்திருந்த நிலையில், மெக்கர்க் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் இங்லிஸ் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் ஷார்ட் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் மேக்ஸ்வெல் 21 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராஃப் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் பாகிஸ்தான் அணி 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ரிஸ்வான் - பாபர் அசாம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
இதில் பாபர் அசாம் 3 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஃபர்ஹாப் 5 ரன்களில் வெளியேறினார். இதன் காரணமாக கேப்டன் ரிஸ்வான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது ஸ்பென்சர் ஜான்சன் பவுலிங்கில் ரிஸ்வான் 26 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, ஆகா சல்மான் டக் அவுட்டாகினார். இதனால் பாகிஸ்தான் அணி 9.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதன்பின் உஸ்மான் கான் - இர்ஃபான் கான் இருவரும் விரைவாக ரன்கள் குவிக்க, பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. அப்போதும் ஸ்பென்ச ஜான்சன் பவுலிங்கில் உஸ்மான் கான் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த அப்பாஸ் அப்ரிடி 4 ரன்களிலும், ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் சூஃபியான் ஆகியோர் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஹாரிஸ் ராஃப் 2 ரன்களில் ரன் அவுட்டாகினர்.
இதனால் பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதோடு, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் 4 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.