மும்பை: பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட தயாராக இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா செயல்பட்டார். இந்திய ஆடுகளங்கள் பற்றி அறிவும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கான லைன் மற்றும் லெந்த் உள்ளிட்டவற்றில் ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட அஜய் ஜடேஜா மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

1992 முதல் 2000 ஆண்டு வரை இந்திய அணிக்காக 196 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5359 ரன்களை விளாசியவர் அஜய் ஜடேஜா. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வாக்கர் யூனுஸ்-க்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் 40 ரன்களை விளாசியவர். அந்தப் போட்டியில் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தது இன்றும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
இதன்பின் சூதாட்ட புகாரில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தாலும், ஐபிஎல் தொடரில் 2015ஆம் ஆண்டு டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தவர் அஜய் ஜடேஜா. அதேபோல் ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட ஆடுகளங்கள் குறித்து முழுமையான அறிவை பெற்றவர். இதனால் அஜய் ஜடேஜாவின் இணைப்பு, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பெரும் உதவியாக இருந்தது.
இந்த நிலையில் உலகக்கோப்பை குறித்து அஜய் ஜடேஜா பேசுகையில், எங்கள் காலத்தில் பாகிஸ்தான் அணி எப்படி இருந்ததோ, அப்படிதான் இப்போது ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் இருக்கிறார்கள். அப்போதைய பாகிஸ்தான் அணியில் ஒவ்வொரு வீரரும் மற்றவர்களின் தவறை முகத்திற்கு நேராக கூறும் பழக்கத்தை கொண்டவர்கள். அதேபோல் ஆஃப்கானிஸ்தான் வீரர்களும் இருக்கிறார்கள்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் வீரர்களிடையே சிறந்த நட்பும், வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பும் இருப்பதால், இது சாத்தியமாகியது. ஒருவேளை பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் ஒப்புக் கொள்வேன் என்று தெரிவித்தார். உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த பின், அந்த அணியின் புதிய இயக்குநராக ஹஃபீஸ் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.