மும்பை : பாகிஸ்தான் ஒரு நாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக முஹமது ரிஸ்வான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் இருந்த பாபர் அசாம் ராஜினாமா செய்த நிலையில் ரிஸ்வான் தற்போது அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த சூழலில் பாகிஸ்தான அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு நாள் தொடர் நவம்பர் 4, 8 மற்றும் பத்தாம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இது நவம்பர் 14 நவம்பர் 16 மற்றும் நவம்பர் 18ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடைசியாக 2002 ஆம் ஆண்டு தான் ஒரு நாள் தொடரை வென்றது. அதன் பிறகு 22 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது கிடையாது.
கடைசியாக அந்த அணி 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒரு ஒருநாள் போட்டியிலும் 2010 ஆம் ஆண்டு ஒரு டி20 போட்டியிலும் வென்றது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி ஒரு நாள் தொடரை நான்குக்கு ஒன்று என்ற கணக்கிலும், டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கிலும் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன் முகமது ரிஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் ஆஸ்திரேலிய மண்ணில் நாங்கள் கடும் சிரமங்களை சந்தித்தோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. கடந்த சுற்றுப்பயணங்களில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் சரியாக விளையாடவில்லை.
அதேசமயம் நாங்களும் ஆஸ்திரேலியாவுக்கு பல சிக்கல்களை கொடுத்திருக்கின்றோம். இம்முறை நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எங்கள் நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம். நாங்கள் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் விளையாட சென்றோம்.
அப்போது அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவினோம். எங்கள் அணியில் சில குறைகள் இருக்கிறது. அதனை நாங்கள் சரி செய்து இருக்கின்றோம். இதனால் இறைவன் நாடினால் நிச்சயம் நாங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று முகமது ரிஸ்வான் கூறியிருக்கிறார்.