சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி வெறும் 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த சம்பவம் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி ரிஸ்வான் மற்றும் ஆமிர் ஜமால் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 313 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 116 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்த நிலையில், திடீரென மழை பெய்தது. இதனால் 2ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் - லபுஷேன் கூட்டணி தொடங்கியது. பாகிஸ்தான் அணி பவுலர்கள் தரப்பில் இருவரையும் வீழ்த்த தீவிரமாக முயற்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த கவர்ஸ் திசையில் 3 ஃபீல்டர்களை நிறுத்தி ஃபுல் லெந்தில் ஹம்சா பந்துவீச, நேராக பாபர் அசாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின் அடுத்த ஓவரிலேயே அரைசதம் அடித்த லபுஷேன் 60 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களில் மிட்செல் மார்ஷ் மட்டும் 54 ரன்கள் சேர்த்தார். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 299 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் பாகிஸ்தான் அணியின் அப்துல்லா - சயீம் அயூப் கூட்டணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அப்துல்லா டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே ஷான் மசூத் டக் அவுட்டானார். இதனால் பாகிஸ்தான் அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் பாபர் அசாம் - சயீம் அயூப் கூட்டணி 3வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. அப்போது ஸ்டார்க் வீசிய பந்தில் சயீம் 33 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஹேசல்வுட் பந்தில் பாபர் அசாம் 23 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஷகீல் 2 ரன்களிலும், ஷாஜித் கான் மற்றும் சல்மான் இருவரும் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். வெறும் 9 ரன்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் பாகிஸ்தான் அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 6 ரன்களிலும், ஜமால் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4ஆம் நாளில் பாகிஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை என்றால், மீண்டும் தோல்வியடையவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.