பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதோடு, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக 22 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வீழ்த்தி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது பாகிஸ்தான் அணி. இதன் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற, 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில் வாழ்வா, சாவா போட்டியான 3வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் மேத்யூ ஷார்ட் - மெக்கர்க் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. 20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த போது, மெக்கர்க் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஆரோன் ஹார்டி 12 ரன்களிலும், கேப்டன் இங்லிஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனிடையே கூப்பர் 7 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக ரிட்டையர்ட் அவுட்டாகினார். பின்னர் ஷார்ட் 22 ரன்களிலும், மேக்ஸ்வெல் டக் அவுட்டாகியும், ஸ்டாய்னிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 88 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த சாம்பா 12 ரன்களும், அப்பாட் 30 ரன்களும், ஸ்பென்சர் ஜான்சன் 12 ரன்களும் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா அனி 31.5 ஓவர்களில் வெறும் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 141 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சயீம் அயூப் - அப்துல்லா சஃபிக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
இருவரின் விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. இதனால் முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 84 ரன்கள் குவித்த நிலையில், அப்துல்லா சஃபிக் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் சயிம் அயூப் 42 ரன்களில் வெளியேறம், பாகிஸ்தான் அணி 85 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் கூட்டணி இணைந்தது.
இருவரும் நிதானமாக விளையாடி பாகிஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடிய பாபர் அசாம் 28 ரன்களும், ரிஸ்வான் 30 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. அதேபோல் ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
அதுமட்டுமல்லாமல் 22 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து பாகிஸ்தான் அணி வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. அதேபோல் ஒயிட் பால் கேப்டனாக முகமது ரிஸ்வான் பொறுப்புக்கு வந்த முதல் தொடரிலேயே பாகிஸ்தான் வென்றிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.