கெய்ர்ன்ஸ்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜின் மாயாஜால சுழற்பந்து வீச்சால், ஆஸ்திரேலிய அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் மட்டும் தனி ஆளாகப் போராடியது வீணானது.
கெய்ர்ன்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, எய்டன் மார்க்ரம் (82), கேப்டன் டெம்பா பவுமா மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது.

297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், சுழற்பந்து வீச்சு அறிமுகமானதும் ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறியது. அறிமுக வீரர் பிரெனெலன் சுப்ராயென், டிராவிஸ் ஹெட்டை வெளியேற்ற, அடுத்து வந்த கேஷவ் மகராஜ் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை மொத்தமாக சரித்தார். தனது முதல் பந்திலேயே மார்னஸ் லபுஷேனை எல்பிடபிள்யூ ஆக்கிய மகராஜ், தொடர்ந்து கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார்.
ஒரு கட்டத்தில் 60 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த ஆஸ்திரேலியா, அடுத்த 29 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து 89/6 எனத் திணறியது. வெறும் 26 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது முதல் ஒருநாள் 5-விக்கெட் சாதனையை பதிவு செய்தார் மகராஜ். இறுதியில் 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தாலும், மறுமுனையில் கேப்டன் மிட்செல் மார்ஷ் தனி ஒருவனாக நின்று போராடினார். நிதானமாகவும், அதே சமயம் அதிரடியாகவும் ஆடிய அவர் 98 பந்துகளில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்தப் போராட்டம் ஆஸ்திரேலிய அணியின் தோல்வி வித்தியாசத்தைக் குறைக்க மட்டுமே உதவியது.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. போட்டியின் ஆட்டநாயகனாக கேஷவ் மகராஜ் தேர்வு செய்யப்பட்டார். 2வது ஒருநாள் போட்டி வரும் வெள்ளிகிழமை காலை 10 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கும். ஜியோ ஹாட் ஸ்டாரில் இந்தப் போட்டிகளை பார்க்கலாம்.