டார்வின்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி டார்வின் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஸ் 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். மற்றொரு அபாயகரமான தொடக்க வீரரான டிராவிட் ஹெட், ஏழு பந்துகளை எதிர் கொண்டு வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதைப் போன்று ஜோஸ் இங்கிலீஷ் டக் அவுட் ஆக ஆஸ்திரேலிய அணி 30 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் அணி சரிவில் இருக்க ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரான் கிரீன் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
எனினும் முக்கிய கட்டத்தில் அவர் ஆட்டம் இழக்க, மிட்செல் ஓவன் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து திரும்பினர். இதனால் 75 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறியது. இந்த கட்டத்தில் டிம் டேவிட் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்த அவர் 52 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார்.இதில் எட்டு இமாலய சிக்சர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் நாதன் எல்லீஸ் 12 ரன்களிலும், பென் டிவார்ஷியஸ் 17 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சு தரப்பில் மாபாகா நான்கு ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி வெறும் இருபது ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.இதேபோன்று தமிழக வம்சாவளியை சேர்ந்த செனுரான் முத்துசாமி என்பவர் நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மற்றொரு ஸ்டார் வீரரான ரபாடா நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.