மக்காய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) போட்டி 54 ஆண்டுகளாக விளையாடப்பட்டு வரும் நிலையில், அதன் வரலாற்றிலேயே இதுவரை எந்த வீரரும் செய்யாத ஒரு இமாலய சாதனையை தென்னாப்பிரிக்காவின் இளம் பேட்ஸ்மேன் மேத்யூ பிரீட்ஸ்கே நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். இதன் மூலம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி தடுமாறியபோது 4-வது வீரராக களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கே, 78 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம், தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 50+ ரன்களை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தினார்.

54 ஆண்டு ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்து இருக்கிறார். இதற்கு முன் எந்த கிரிக்கெட் வீரரும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை.
முன்னதாக, இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியிலேயே 150 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் பிரீட்ஸ்கே படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
26 வயதான பிரீட்ஸ்கே, தனது பேட்டிங் வரிசையிலும் பல திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். தனது முதல் சதத்தை தொடக்க வீரராகவும், பாகிஸ்தானுக்கு எதிரான அரைசதத்தை 3-வது வீரராகவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு அரைசதங்களை 4-வது வீரராகவும் அடித்து, அணியின் எந்த இடத்திலும் களமிறங்கி ரன் குவிக்கக் கூடியவர் என்பதை நிரூபித்துள்ளார்.
இதற்கு முன், இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து தனது முதல் 5 போட்டிகளில் நான்கு அரைசதங்களை அடித்திருந்தார். அதேபோல, கெப்லர் வெசல்ஸ் தென்னாப்பிரிக்காவுக்காக தனது முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்திருந்தாலும், அவர் அதற்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்காக 54 போட்டிகளில் விளையாடியிருந்தார். ஆனால், பிரீட்ஸ்கே தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அறிமுகமாகியுள்ள பிரீட்ஸ்கே, தனது இந்த தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் மூலம், 2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தனக்கான இடத்தை வலுவாக உறுதி செய்து வருகிறார்.