தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் 47வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸின்போது ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் நடைபெற்றது. 84 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த கேமரன் கிரீன், வியான் மல்டரை நோக்கி லாங்-ஆன் பகுதியில் பந்தை பறக்கவிட்டார். எல்லையில் நின்றுகொண்டிருந்த டிவால்ட் பிரிவிஸ் ஒரு அற்புதமான கேட்சை பிடித்தார்.
ஆனால் அவர் பவுண்டரி லைனை கடந்து வெளியே செல்ல நேரிட்டது. இந்த நிலையில் கேட்ச் பிடிக்க முயன்ற பிரிவிஸ், பந்தை மீண்டும் களத்திற்குள் திருப்பி வீசி, எல்லையை வெளியே குதித்து மீண்டும் பந்தை களத்திற்குள் வந்து பிடித்தார்.

இதனையடுத்து, தென்னாப்பிரிக்க வீரர்கள் அது கேட்ச் தான் என்று நம்பினாலும், நடுவர்கள் கிரீனுக்கு ஆறு ரன்கள் வழங்கினர். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பழைய விதிப்படி இது அவுட் தான் என்றாலும், புதிய விதிப்படி இது நாட் அவுட் ஆகும். புதுப்பிக்கப்பட்ட ICC மற்றும் MCC விளையாட்டு விதிமுறைகளின்படி, முதலில் பந்தை களத்திற்குள் தொடும்போது ஒரு பீல்டர், எல்லை கயிறு வெளியே காற்றில் இருக்கும்போது பந்தை ஒரு முறை மட்டுமே தொட முடியும்.
இரண்டாவது முயற்சியை மேற்கொள்ள, அவர் மீண்டும் விளையாட்டு களத்திற்குள் இறங்கி பந்தை மீண்டும் தொட வேண்டும். பிரவிஸ் எல்லை கயிறு வெளியே பல முறை பந்தை தொட்டு, களத்திற்கு திரும்பவில்லை என்பதால், அது கேட்ச் கிடையாது என்று கூறி, கிரீனுக்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது. இந்த முடிவு போட்டியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. 80 ரன்களில் அவுட்டாகி இருக்க வேண்டிய கிரீன் தப்பி, 47 பந்துகளில் தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது வேகமான சதமாகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 431/2 என்ற நிலையை அடைய உதவியது. இதில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரும் சதம் அடித்தனர். பதிலுக்கு, தென்னாப்பிரிக்கா 155 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இது தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் போட்டிகளில் 276 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியாகும். ஆனால் தென்னாப்பிரிக்க தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.