ராவல்பிண்டி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நீண்ட நேரம் தடைபட்டதை அடுத்து போட்டி கைவிடப்பட்டது. பிப்ரவரி 25 (இன்று) இந்தப் போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், போட்டி நடைபெற வேண்டிய ராவல்பிண்டி மைதானத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மழை பெய்தது.
ராவல்பிண்டி மைதானம் மழையால் குளம் போல மாறியது. மேலும், மழையும் நிற்கவில்லை. இதனிடையே இந்தப் போட்டி குறைந்தபட்சம் 20 ஓவர்களாக நடத்தப்பட்டால் மட்டுமே அதன் முடிவு எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்தது. இந்திய நேரப்படி இரவு 7:02 மணிக்குள் இந்தப் போட்டி துவங்க வேண்டும் என கூறப்பட்டது.
ஆனால், அதற்கு முன் 5.40 மணி அளவில் மைதானம் இருந்த நிலையை கருத்தில் கொண்டும், மழை நிற்காததாலும் போட்டி கைவிடப்பட்டதாக அம்பயர்கள் அறிவித்தனர். இப்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எத்தனை புள்ளிகள் வழங்கப்படும்? அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதா என பார்க்கலாம்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் குரூப் பி பிரிவில் இடம் பெற்று உள்ளன. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டு உள்ளது.
இது குரூப் பி பிரிவில் அரையிறுதிக்கு எந்த இரண்டு அணிகள் முன்னேறும் என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
தற்போது குரூப் பி பிரிவில் அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாட உள்ளன. தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் இரு அணிகளும் ஐந்து புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறி விடும்.
அதே சமயம், மீதமுள்ள அந்த ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அப்போது மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு முடிவு செய்யப்படும்.