கொல்கத்தா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அடைந்த தோல்விக்கான காரணம் பற்றி பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி டேவிட் மில்லரின் அதிரடியான சதம் காரணமாக 49.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். அதேபோல் இந்த வெற்றியின் மூலமாக மூலமாக ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நவ.19ல் இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோதவுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் இந்த தோல்விக்கு பேட்டிங்கில் சொதப்பியதே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய போதே சுதாரித்து கவனமுடன் விளையாடி இருகக் வேண்டும். ஆனால் மார்க்ரம் மற்றும் வான் டர் டூசன் இருவரும் தேவையில்லாத ஷாட்களை விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தனர். அவர்கள் ஒரு 30 ரன்களை கூடுதலாக சேர்த்திருந்தால் ஆட்டம் மொத்தமாக மாறியிருக்கும். அதேபோல் 100% உடல்தகுதி இல்லை என்பதை அறிந்தும் பவுமா களமிறங்கியிருக்க தேவையில்லை.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் ஃபீல்டிங்கும் இன்றைய தோல்விக்கு முக்கியமான காரணமாக உள்ளது. மொத்தமாக 6 கேட்ச்கள் வரை கோட்டைவிட்டனர். டி காக், பவுமா, டேவிட் மில்லர், மார்க்ரம், வான் டர் டூசன், கொயட்ஸி என்று தென்னாப்பிரிக்காவின் சிறந்த ஃபீல்டர்கள் அனைவரும் கேட்ச்களை விட்டனர். அதேபோல் மார்க்ரமை கடைசி நேரத்தில் கொண்டு வந்ததும் தென்னாப்பிரிக்கா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் கேப்டன்சியில் பவுமா பல்வேறு தருணங்களில் கோட்டைவிட்டார். டேவிட் வார்னர் மற்றும் ஹெட் இருவரும் ஸ்பின்னர்களிடம் திணறுவார்கள் என்பதை அறிந்தும், மகாராஜ் மற்றும் ஷம்சி இருவரும் தாமதமாக அட்டாக்கிற்கு வந்தனர். ஏனென்றால் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடிய ரன்களே ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.