லண்டன்: ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸ் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 207 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி இதுவரை ஐந்து முறை மட்டுமே 250-க்கும் அதிகமான இலக்குகளை எட்டி வெற்றி பெற்றுள்ளது. அதில் மூன்று முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 250 ரன்களுக்கு அதிகமான இலக்கை எட்டி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது இறுதிப் போட்டி நடைபெற்று வரும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 200 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதே சவாலான விஷயமாகும். இதுவரை இந்த மைதானத்தில் 135 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று இருக்கும் நிலையில், அதில் நான்கு முறை மட்டுமே 200-க்கும் அதிகமான இலக்கு எட்டப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில், தென்னாப்பிரிக்க அணி 282 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது மிகப்பெரும் சவாலாக இருக்கும். அப்படி எட்டி வெற்றி பெற்றால், அது அவர்களின் டெஸ்ட் வரலாற்றில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகவும் அமையும்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 138 ரன்களும் எடுத்தன. இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் 74 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த ஆஸ்திரேலியா, இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் 100 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்று பலரும் எண்ணினர்.
ஆனால், எட்டாவது மற்றும் ஒன்பதாம் வரிசையில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக ஆடினர். அலெக்ஸ் கேரி 43 ரன்கள் சேர்க்க, மிட்செல் ஸ்டார்க் அரை சதம் அடித்து 58 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணிக்கு 282 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.