SL vs AUS: இலங்கையை கதற விட்ட கங்காரு.. 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
கல்லே: ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. இந்தப் போட்டியில் நான்காம் நாள் அன்று ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த தொடரை 2 - 0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
கல்லேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 47.4 ஓவர்களில் 257 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் 74 ரன்களும், குசால் மெண்டிஸ் 85 ரன்களும், தனது கடைசி போட்டிகளில் விளையாடிய திமுத் கருணாரத்னே 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான் மற்றும் மேத்யூ குஹ்னெமன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 41.4 ஓவர்களில் 414 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களும், அலெக்ஸ் கேரி 156 ரன்களும் எடுத்திருந்தனர். இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி நான்காவது விக்கெட்டுக்கு 259 ரன்கள் கூட்டணி அமைத்து இலங்கை அணியை கதற விட்டனர்.
இதையடுத்து நிலை குலைந்து இருந்த இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 76 ரன்களும், குசால் மெண்டிஸ் 50 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணிக்கு 75 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு விக்கெட் இழந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி அந்த இலக்கை எட்டியது.
இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்தப் போட்டியில் 156 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இரண்டு சதம் அடித்த நிலையில் தொடர் நாயகன் விருதை வென்றார். கேப்டனாகவும் இரண்டு போட்டிகளையும் வென்று கொடுத்து முத்திரை பதித்தார் ஸ்டீவ் ஸ்மித்.


Click it and Unblock the Notifications