லக்னோ: இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரெரா பந்துவீசுவதற்கு முன்பே க்ரீஸில் இருந்து வெளியேறியதால், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டார்க் வார்னிங் கொடுத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணி தரப்பில் ஷனகா மற்றும் பதிரானா நீக்கப்பட்டு, சமீரா மற்றும் லஹிரு குமாரா இருவரும் சேர்க்கப்பட்டனர்.

இந்த உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் எந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணி தரப்பில் நிசாங்கா - குசல் பெரெரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார்.
முதல் பந்திலேயே யார்க்கர் வீசப்பட, அந்த பந்து இலங்கை அணியின் நிசாங்காவால் தடுக்கப்பட்டது. அதன்பின் 4வது பந்தை வீச ஸ்டார்க் வேகமாக ஓடி வரும் போது, எதிர்முனையில் இருந்து குசல் பெரெரா க்ரீல் இருந்து வேகமாக வெளியேறினார். இதனை பார்த்த மிட்செல் ஸ்டார்க் பந்தை வீசாமல் நிறுத்தியதோடு, பேட்ஸ்மேன் குசல் பெரெராவை கோபத்துடன் பார்த்தார். அதேபோல் மன்கட் எச்சரிக்கையையும் கொடுத்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 5வது ஓவரின் கடைசி பந்திலும் மீண்டும் க்ரீல் இருந்து வெளியேற முயற்சித்தார். அப்போதே மிட்செல் ஸ்டார்க் பந்துவீசுவதை நிறுத்தினார். ஆனால் இம்முறை வார்னிங் எதுவும் வழங்கவில்லை. மன்கட் முறை ரன் அவுட்டிற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அஸ்வின் ஏராளமான முறை வீடியோ மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆனாலும் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. ஆனால் இன்றைய ஒரே போட்டியில் மிட்செல் ஸ்டார்க் இரு முறை கோபமடைந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.