செயிண்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர் பிராண்டன் கிங் 62 ரன்களும், சிம்ரன் ஹெட்மயர் 9 ரன்களும்,ரூத்தர்போர்ட் 12 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போவெல் , ரோமாரியோ செபர்ட் தலா 9 ரன்கள் எடுக்க மறுமுனையில் கேப்டன் சாய் ஹோப் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுக்கட்டத்தில் சாய் ஹோப் 26 பந்துகளில் அரை சதம் அடித்து தொடர்ந்து பட்டையை கிளப்பினார்.

இதன் மூலம் 55 பந்துகளில் தன்னுடைய சதத்தை அவர் பூர்த்தி செய்தார்ம் இதில் எட்டு பவுண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருக்கின்றது. இதை அடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.
கேப்டன் மிட்செல் மார்ஸ் ஐந்து பவுண்டரிகள் அடிக்க 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 7 பந்துகளில் 20 ரன்களும், ஜோஸ் இங்கிலீஷ் 6 பந்துகளில் 15 ரன்களும், கேமரூன் கிரீன் 14 பந்துகளில் 11 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த டிம் டேவிட் தன்னுடைய வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிக்சர், பவுண்டரி என அவர் விரட்டினார். 16 பந்துகளில் அரை சதம் கடந்த டிம் டேவிட் தொடர்ந்து பட்டையை கிளப்பினார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இறுதியில் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இதன் மூலம் 215 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவர் எல்லாம் எட்டி தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. நான்காவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.