கொழும்பு: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே அணி வீழ்த்தி இருக்கிறது.இந்த சூழலில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிராவிஸ் ஹெட், விக்கெட்டுகளை விரைவில் இழந்ததால் தான் தோல்வியை தழுவினோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் நன்றாகத்தான் இருந்தது. முதலில் கொஞ்சம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. நாங்கள் முதலில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆடுகளம் ஒரே மாதிரி தான் செயல்படும் என்று நினைத்தோம். நாங்கள் பந்துவீச்சில் மொத்தமாகவே இரண்டு விக்கெட்டுகளை தான் எடுத்தோம் என்றாலும் இன்னிங்ஸ் முழுவதும் அவர்களை நாங்கள் எங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.

நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆரம்பத்தில் சிலர் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஜிம்பாப்வே அணி இன்று சிறப்பாக செயல்பட்டார்கள். இன்னும் நான் இந்த இலக்கு எட்ட கூடியது தான் என்று நினைக்கின்றேன். இந்த இலக்கை சேஸ் செய்வதில் முதலில் நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன்.
ஏனென்றால் வீரர்களிடம் கேட்ட வகையில் இது நல்ல ஆடுகளம் தான் என்று சொன்னார்கள். ஆனால் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்து, எங்களுக்கு நாங்களே அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டோம். போட்டியின் நடுவே சில பார்ட்ணர்சிப்பை நாங்கள் அமைத்துக் கொண்டோம். ஆனால் எங்களால் இலக்கை எட்ட முடியவில்லை.
இது போன்ற சூழலில் நாங்கள் பல்வேறு தொடர்களில் இருந்திருக்கின்றோம். 2023 உலக கோப்பை தொடரிலும், இதுபோல்தான் நாங்கள் தோல்வியை தழுவி இக்கட்டான நிலையில் இருந்தோம். சிலர் வீரர்களுக்கு காயமும் ஏற்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொடரில் விளையாடிய சில வீரர்களும் மீண்டும் இந்த தொடரில் விளையாடுகின்றோம். இந்த இக்கட்டான நிலையை கடந்து செல்வோம். அதற்கான ப்ளூ பிரிண்ட் எங்களிடம் இருக்கின்றது என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.