மும்பை: நடப்பு டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் அடித்து கூறி வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் ஒரு சுவராஸ்ய வரலாற்று சம்பவத்தையும் குறிப்பிட்டு, கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது டி20 கோப்பை, சொந்த மண்ணில் வெற்றி, மூன்று உலகக் கோப்பைகள் என பல சாதனைகளை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த நிலையிவ் , ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையின் குரூப் பி, 19வது ஆட்டத்தில், ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பிரையன் பென்னட் 64 ரன்கள் உதவியுடன் ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 169/2 எடுத்தது.

பதிலுக்கு ஆடிய ஆஸ்திரேலியா, பிளெசிங் முசரபானியின் அதிரடிப் பந்துவீச்சால் (4/17) 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற, நடப்பு உலககோப்பை தொடரில் மிகப்பெரிய அப்சட்டாக இது பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எப்போது எல்லாம் உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேவிடம் தோற்கிறதோ, அப்போது எல்லாம், இந்தியாவே உலககோப்பையை வெல்கிறது.
செப்டம்பர் 12, 2007 அன்று நடந்த டி20 உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 138/9 எடுத்தது. பிராட் ஹாட்ஜ் 35 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே சார்பில் எல்டன் சிகும்பூரா 3/20 விக்கெட்டுகளை எடுத்தார். பிரெண்டன் டெய்லரின் 60 ரன்கள் உதவியுடன் ஜிம்பாப்வே 19.5 ஓவர்களில் 139/5 எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. அப்போது இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதே போன்று 1983 உலகக் கோப்பையில், ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒரு வரலாற்றுச் சாதனை படைத்தது. நாட்டிங்ஹாமில் நடந்த அந்தப் போட்டியில், டங்கன் பிளெட்சர் 84 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தார். கெவின் கரண் (27) உட்பட பலரின் பங்களிப்புடன் ஜிம்பாப்வே 60 ஓவர்களில் 239/6 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் கிரகாம் யாலோப் 2/28 எடுத்தார். பதிலுக்கு, கெப்லர் வெஸ்ஸல்ஸ் 76 ரன்கள் (130 பந்துகள்) எடுத்தபோதும், டங்கன் பிளெட்சரின் சிறப்பான பந்துவீச்சு (11 ஓவர்களில் 4/42) ஆஸ்திரேலியாவை 226 ரன்கள் மட்டும் எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போதும் இந்தியா தான் கோப்பையை வென்றது. தற்போது மீண்டும் 3வது முறையாக உலககோப்பையில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை பதம் பார்க்க, இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.