கான்பெரா: 4வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா இமாலய ரன் குவிப்பை மேற்கொண்டாலும் கூட இந்தியா மிகத் தெளிவாக சேஸ் செய்து வந்ததைப் பார்த்தபோது, சரிதான் இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் சிறப்பாக ஆடிய ஷிகர் தவானும், விராத் கோஹ்லியும் அவுட்டாகிப் போன அடுத்த சில நிமிடங்களிலேயே இந்தியாவின் தலைவிதி (திருப்பி) திருத்தி எழுதப்பட்டு விட்டது.
ஷிகர் தவான் போட்ட அருமையான சதமும் விராத் கோஹ்லி அடித்த அட்டகாச சதமும் அப்படியே வீணாகிப் போனது. ரசிகர்கள் அப்படியே ஷாக்காகிப் போயுள்ளனர். டோணியும் அவருக்குப் பின்னர் வந்தவர்களும் அப்படியே விசிட்டிங் புரபஸர் போல வந்தார்கள், போனார்கள்.. எல்லாவற்றையும் ஊத்தி மூடி விட்டார்கள். கண்டிப்பாக இன்று இரவு இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் நிச்சயம் பெரும் சண்டைக்கு வாய்ப்புண்டு.

பின்ன என்னங்க.. கைக்கு வந்த வெற்றியை இப்படியா கைவிடுவார்கள்.. என்ன விளையாட்டு இது.. அருமையான அடித்தளம் போட்டுக் கொடுத்த கோஹ்லி, தவானின் உழைப்புக்கு கொஞ்சம் கூட மரியாதை சேர்க்கவில்லையே பின்னர் வந்தவர்கள். நிச்சய வெற்றியுடன் போய்க் கொண்டிருந்த இந்தியாவின் சேஸிங் இப்படிக் கேவலப்பட்டுப் போனதற்குக் காரணம் யார் என்பதை யாருமே சொல்ல வேண்டியதில்லை. ஆனால் டோணி பதில் சொல்லியாக வேண்டும்.
முன்னதாக 3 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியுற்று தொடரையும் இழந்த விட்ட இந்தியா இன்று ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் ஒரு அவமானத்தைச் சந்தித்தது. இந்திய அணியின் பவுலிங்கை நையப்புடைத்து விட்ட ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்களைக் குவித்தது.
ஆஸ்திரேலியாவை நான்காவது ஒரு நாள் போட்டியில் கான்பெராவில் சந்தித்தது இந்தியா. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நடந்து முடிந்த 3 ஒரு நாள் போட்டிகளிலும் கூட ஆஸ்திரேலியாதான் டாஸ் வென்றது. 3 போட்டிகளிலும் அது முதலில் பந்து வீச்சையேத் தேர்வு செய்தது. இந்த நிலையில் இன்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
சரி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆஸ்திரேலியாவை பவுலிங் மூலம் முடக்குவார்கள் என்று பார்த்தால் வழக்கம் போல முடங்கிப் போய் விட்டார்கள். வார்னரும், பின்ச்சும் பிரித்து மேய்ந்து விட்டனர். வார்னர் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் பின்ச் அதிரடியாக ஆடி 107 ரன்களைக் குவித்து வெளியேறினார்.
பின்னர் வந்த மார்ஷும், ஸ்மித்தும் தொடர்ந்து சிறப்பாக ஆடினர். மார்ஷ் 33 ரன்களில் விழ, ஸ்மித் அதிரடியாக ரன் குவித்து 51 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு கடைசிக் கட்டத்தில் மேக்ஸ்வெல் வான வேடிக்கை காட்டினார். 20 பந்துகளைச் சந்தித்த அவர் கடைசி 2 ஓவர்களில் சிறப்பாக ஆடி 41 ரன்களைக் குவித்தார். இடையில் இஷாந்த் சர்மாவுடன் ஒரு சின்ன வாக்குவாதமும் அரங்கேறியது.
இறுதி்யாக 8 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 348 ரன்களைக் குவித்தது. இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கட்களையும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்களையும் சாய்த்தனர். மற்றவர்களுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
இதையடுத்து தனது சேசிங்கைத் தொடங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா -தவான் ஜோடி குஷியைக் கிளப்பும் வகையில் ஆட்டத்தைக் கொடுத்தது. இருவரும் அபாரமாக ஆடினர். ஆனால் ரோஹித் சர்மா 41 ரன்களில் விழுந்தார். ஆனால் அதன் பின்னர் தவான், கோஹ்லி ஜோடி பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தது. இருவரும் சரமாரியாக அடித்து ஆடினர்.
இருவரும் அபாரமான சதம் போட்டனர். தவான் 126 ரன்களையும், கோஹ்லி 106 ரன்களையும் குவித்தனர். இருவரும் அடித்த வேகத்தைப் பார்த்தபோது இவர்களே வெற்றியையும் கொண்டு வந்து விடுவார்களோ என எண்ண வைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவரும் பிரிந்தனர். அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் ஹேஸ்டிங்ஸ் பிரித்தார்.
அதன் பிறகுதான் நிலைமை அப்படியே மாறிப் போனது. டோணி வந்த வேகத்தில் டக் அவுட். குர்கீரத் சிங் 5. ரஹானே 2 என வெளியேற இந்தியா சுருண்டு போனது.
இக்கட்டான நிலையில் ரவீந்திர ஜடேஜா அடிக்கப் பார்த்தார். ஆனால் மறு முனையில் விக்கெட்கள் மடமடவென சரிய அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசி வரைப் போராடிப் பார்த்து 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கமல் இருந்தார் ஜடேஜா.
49வது ஓவர்களில் 323 ரன்களில் சுருண்டு போனது இந்தியா.. இந்தியாவின் அருமையான சேஸிங்கை புத்திசாலித்தனமாக முடிவுக்குக் கொண்டு வந்தது ஆஸ்திரேலியா. குறிப்பாக ஹேஸ்டிங்ஸ் பிரமாதமாக பந்து வீசினார். 5 விக்கெட்களை அவர் சாய்த்தார்.
இந்தியாவுக்கு இது 4வது தொடர் தோல்வி. இன்னும் ஒரு போட்டி பாக்கி உள்ளது.