
இந்தியா 244.. ஆஸி. 191
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் அடிலெய்டில் பகலிரவு போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி, 244 ரன்களை எடுத்த நிலையில், தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களில் சுருண்டது.

3வது நாளில் தொடரும் போட்டி
தொடர்ந்து இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ளது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை எடுத்துள்ளது. ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் மயங்க் அகர்வால் களத்தில் உள்ளனர். நாளைய மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்தியா தொடரவுள்ளது.

33 ஆண்டுகளில் இல்லாத ஆட்டம்
இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத வகையில் சொந்த மண்ணில் மிகவும் மெதுவான ஆட்டத்தை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தின் இடையில் 87 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நேரத்தில் ஸ்டிரைக் ரேட் 1.83ஆக ஆஸ்திரேலிய அணிக்கு இருந்தது. இது மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட் ஆகும்.

ஸ்டிரைக் ரேட் 1.83
முன்னதாக இந்தியாவிடமே குறைந்த ஸ்டிரைக் ரேட்டை கடந்த 2013, 2017 ஆகிய ஆண்டுகளில் முறையே ஐதராபாத்தில் 131 ரன்களில் 1.95 ஸ்டிரைக் ரேட்டையும் ராஞ்சியில் 206 ரன்களில் 2.04 ஸ்டிரைக் ரேட்டையும் ஆஸ்திரேலியா பெற்றிருந்தது. இதேபோல இலங்கையுடனான போட்டியில் 1.81 மற்றும் இங்கிலாந்துடனான போட்டியில் 2.11 ஸ்டிரைக் ரேட்களை பெற்றிருந்தது.

ஒரு ஓவரில் 2க்கும் குறைவான ரன்கள்
அனைத்தையும் விட இன்றைய போட்டியில் ஆடிய ஆட்டமே மிகவும் மெதுவான போட்டி. இதன்மூலம் ஒரு ஓவரில் 2க்கும் குறைவான ரன்களையே எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. இந்த ஆட்டம் சர்வதேச அளவில் ஹர்ஷா போக்ளே போன்ற வர்ணனையாளர்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்திய பௌலர்கள் அதிரடி
இதற்கெல்லாம் முக்கிய காரணம் இந்திய அணியின் பௌலர்களே. அஸ்வின், பும்ரா உள்ளிட்டவர்களின் அதிரடி பௌலிங் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா ரணகளத்திற்கு உள்ளாக காரணமாக இருந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் அஸ்வின் பௌலிங்கின் முன்னால் ஒரு ரன்னில் காணாமல் போனார்.


Click it and Unblock the Notifications










