திருவனந்தபுரம் : தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளிலும் ஆட முடியாமல், பயிற்சியும் செய்ய முடியாமல் சிக்கி உள்ளன.
இந்தியாவில் நடக்கும் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பல்வேறு நாடுகளும் இந்தியா வந்துள்ளன.

முதலில் பயற்சிப் போட்டிகள் நடைபெறத் துவங்கி உள்ளது. உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்களை விடுத்து வேறு மைதானங்களில் பயிற்சிப் போட்டிகள் நடைபெறும் வகையில் பிசிசிஐ போட்டிகளை திட்டமிட்டு இருக்கிறது.
அதில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மைதானமும் ஒன்று. தற்போது கேரளாவில் கடுமையான மழைப் பொழிவு உள்ளது. செப்டம்பர் இறுதி வாரமும், அக்டோபர் முதல் வாரமும் அங்கு அதிக மழை பெய்யும் என வானிலை தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், அங்கு பயிற்சிப் போட்டியில் ஆடச் சென்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முதலில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டி வெள்ளிக்கிழமை அன்று நடக்க இருந்தது. ஆனால், அன்று மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டது.
அடுத்து சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் இடையே ஆன போட்டி அதே மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால், மதியம் 2 மணிக்கு துவங்க வேண்டிய
போட்டி, மாலை 5 மணி வரை துவங்கவே இல்லை.

ஆஸ்திரேலிய வீரர்கள் மழைக்கு நடுவே மைதானத்துக்கு வந்ததே பெரிய விஷயமாக இருந்தது. எதற்காக மைதானம் வருகிறோம் என்ற சந்தேகத்தில் தான் அவர்கள் வந்தனர். அந்த அளவுக்கு மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கி நின்றது.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால், தென்னாப்பிரிக்கா தனது இரண்டு பயிற்சிப் போட்டிகளையும் இதே மைதானத்தில் தான் ஆட உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி முதல் பயிற்சி போட்டி ரத்தான நிலையில், கவுஹாத்தியில் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் பங்கேற்க சென்று விட்டது. அதனால், அங்கேயே அந்த அணி பயிற்சி மேற்கொள்ளும்.
ஆனால், தென்னாப்பிரிக்கா அணி மழைக்கு நடுவே பயிற்சி செய்யவே முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் தன் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் பங்கேற்க நாளை ஹைதராபாத் சென்று விடும். ஆனாலும், இது தேவையற்ற அலைச்சல் தான். தென்னாப்பிரிக்கா அணி நிலைமை தான் இன்னும் மோசம்.
உலகக்கோப்பை தொடரின் துவக்கத்திலேயே முக்கிய அணிகளான தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளையே புலம்ப விட்டுள்ளது பிசிசிஐ.
பயிற்சி செய்யத் தான் பயிற்சிப் போட்டி. ஆனால், அறையில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையில் தான் சர்வதேச அணிகள் உள்ளன. பிசிசிஐ இதை முன்கூட்டியே கணித்து திட்டமிடும் போதே வேறு மைதானத்தில் போட்டிகளை நடத்தி இருக்கலாம்.