மெல்போர்ன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் சில ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்று இருக்கும் நிலையில், அவர்கள் பெயர் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 1 என வீழ்த்தி வலுவாகச் செயல்பட்டதன் அடிப்படையில், தற்போது உலகின் வலுவான டெஸ்ட் அணிகளில் ஒன்றாக உள்ளது.
மறுபுறம், தென்னாப்பிரிக்காவும் அதிக வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 அன்று தொடங்க உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுஷேன், நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர். பயண இருப்பு: பிரெண்டன் டாகெட்.
ஆஸ்திரேலியாவின் கேப்டனாகப் பாட் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய பேட்ஸ்மேன்களாக கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். ஆல்ரவுண்டராக பியூ வெப்ஸ்டர் இடம்பெற்றுள்ளார். சுழற்பந்துவீச்சாளர்களாக நாதன் லயன் மற்றும் மாட் குஹ்னேமன் இடம்பெற்றுள்ளனர். பயண மாற்று வீரராக பிரெண்டன் டோகெட் இடம் பிடித்து இருக்கிறார்.
இந்த அணியில் அறிவிக்கப்பட்டிருக்கும் வீரர்களில் நால்வர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளனர். ஆனால், தற்போது ஐபிஎல் தொடர் ஜூன் 3 வரை நடைபெற உள்ள நிலையில், ஜூன் 11 அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்க உள்ளது.
இறுதிப் போட்டிக்கு இரண்டு வாரங்கள் முன்பே ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஐபிஎல் தொடரில் பங்கேற்று இருக்கும் நான்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர்களும் அதில் தொடர்ந்து பங்கேற்பது சந்தேகமே. அவர்கள் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆவர்.
இவர்கள் நால்வரும் ஐபிஎல் தொடரின் கடைசிப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், அதற்குப் பதிலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முந்தைய பயிற்சி முகாமில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.