டி20 கிரிக்கெட்: இலங்கையை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா !
கொழும்பு: இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் பல்லேகெலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

மேக்ஸ்வெல் 65 பந்தில் 14 பவுண்டரி, 9 சிக்சருடன் 145 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 27 பந்தில் அரைசம் கடந்த மேக்ஸ்வெல் 49 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார். ஹெட் 18 பந்தில் 45 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். கவாஜா 22 பந்தில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து 264 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய இலங்கை அணி களமிறங்கியது. தில்ஷான் முதல் ஓவரிலேயே 4 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆகி வெளியேறினார். இலக்கை விரட்டி கடுமையாக போராடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக சண்டிமால் 58 (43) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடையில் கபுஜெடரா அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் ஸ்டார்க், போலாடு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
145 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றது.


Click it and Unblock the Notifications