கொழும்பு: 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, ஒரு அபாரமான வெற்றியைப் பதிவு செய்து, தங்கள் தொடர் பயணத்தை வலுவாகத் தொடங்கியது.
ஆரம்பத்தில், மிட்செல் மார்ஷ் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் சற்று தடுமாறியது. இருப்பினும், ஜோஷ் இங்கிலிஸ் 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார். தொடர்ந்து, மேட் ரென்ஷா 33 பந்துகளில் 37 ரன்கள் குவித்து நிலைநிறுத்த, மார்கஸ் ஸ்டோனிஸ் 29 பந்துகளில் அதிரடியாக 45 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

பந்துவீச்சில் ஆஸ்திரேலியா மிகவும் ஆதிக்கம் செலுத்தியது. நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அயர்லாந்தின் பேட்டிங் வரிசையை சிதைத்தனர். குறிப்பாக எல்லிஸ், தொடக்க ஓவர்களிலேயே அசத்தி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு வலுவான அடித்தளமிட்டார்.
தனது மிகச்சிறந்த பந்துவீச்சுக்காக நாதன் எல்லிஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 3.5 ஓவர்களில், 1 மெய்டனுடன், 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நாதன் எல்லிஸ் சிஎஸ்கே அணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இலங்கைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அயர்லாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றியை நோக்கியிருந்தது. ஆனால், முதல் இன்னிங்சில் கேட்ச் பிடிக்க முயன்றபோது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அனுபவ வீரர் பால் ஸ்டிர்லிங் களம் இறங்க முடியாமல் போனது, அவர்களின் நிலையை மேலும் பலவீனமாக்கியது.
ஸ்டிர்லிங் வெளியேறிய பிறகு அயர்லாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அழுத்தத்தில் சரிந்தனர். லோர்கன் டக்கர் ஓரளவு நிலைத்து நின்றாலும், ஜார்ஜ் டாக்ரெல் 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்து தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது போராட்டமும் ஆஸ்திரேலிய இலக்கை அடைய போதுமானதாக இல்லை.
பால் ஸ்டிர்லிங்கின் காயம் குறித்து பேசிய அயர்லாந்தின் தற்காலிக கேப்டன் லோர்கன் டக்கர், "முதல் இன்னிங்ஸில் கேட்ச் பிடிக்க முயன்றபோது பால் ஸ்டிர்லிங்கின் முழங்காலில் அடிபட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் துணிச்சலாக பேட்டிங் செய்ய களமிறங்கினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொடர முடியவில்லை," என்று தெரிவித்தார்.
"மைதானத்தின் தன்மை குறித்து பேசினோம், பேட்டிங்கில் நாங்கள் விரும்பியபடி தொடங்கவில்லை. ஆஸ்திரேலியா பவர்பிளேயில் பந்துவீசிய விதம் பாராட்டுக்குரியது. 150-160 ரன்கள் எங்கள் மனதில் இருந்தது, ஆனால் ஆஸ்திரேலியா அதைவிட அதிகமாக பெற்றது," என்றும் டக்கர் குறிப்பிட்டார். தொடர்ந்து 2 போட்டியில் தோல்வியை தழுவியதால், அயர்லாந்து அணி வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.