கொல்கத்தா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் முதல் 8 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 41 டாட் பால்களை வீசியதோடு, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், முதலில் பந்துவீசும் அணிக்கு நல்ல ஸ்விங் கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் கேப்டன் பவுமா - டி காக் கூட்டணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்திலேயே கேப்டன் பவுமா டக் அவுட்டாகி ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
இதன்பின் வந்த வான் டர் டுசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிட்சில் இருந்த ஸ்விங்கை பயன்படுத்தி உள்ளே, வெளியே என்று பந்தை திருப்பி அச்சத்தை கொடுத்தனர். ஒரு ரன் எடுப்பதே குதிரை கொம்பாக இருந்த நிலையில், திடீரென டி காக் அட்டாக் செய்ய நினைத்து 14 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஹேசல்வுட் பந்தில் டி காக் 8வது முறையாக ஆட்டமிழந்துள்ளார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனால் 8 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி வெறும் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆஸ்திரேலியா அணி மொத்தமாக 48 பந்துகளை வீசிய நிலையில், அதில் 41 பந்துகள் டாட் பாலாக அமைந்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி நாக் அவுட் பிரஷரில் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.