கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், இந்த மகிழ்ச்சியை விட ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பெரிய சோகம் காத்திருந்தது. அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பயிற்சியின் போது ஏற்பட்ட விபரீத காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, உலகக்கோப்பை அணியில் முதலில் தேர்வு செய்யப்படாத நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், தற்போது அவசரமாக இலங்கை வரவழைக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது மிட்செல் மார்ஷின் இடுப்புப் பகுதியில் பந்து பலமாகத் தாக்கியது. இதில் அவருக்கு விதைப்பையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது ஸ்கேன் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "மார்ஷ் அந்தப் பகுதியில் ஏற்பட்ட வலியால் மிகவும் சிரமப்படுகிறார். அவரது அசைவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவருக்குக் கட்டாயம் ஓய்வு தேவை என்பதால் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ், கேப்டனின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார். "கடந்த சில நாட்களாக அவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அடிபட்டால் ஏற்படும் வலியை நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. அவர் இல்லாதது அணிக்குப் பின்னடைவுதான் என்றாலும், நாங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தினோம்" என்று கூறினார்.
டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் முதலில் ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் அடிலெய்ட் நகரில் நிம்மதியாகக் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மார்ஷுக்கு ஏற்பட்ட காயத்தால், ஆஸ்திரேலிய நிர்வாகம் ஸ்மித்தை உடனடியாகக் கொழும்பு வருமாறு அழைத்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் வீரர் மார்க் வாக் தனது எக்ஸ் தளத்தில், "தாமதமானாலும் பரவாயில்லை, ஸ்மித் உடனே கிளம்புங்கள்" என்று பதிவிட்டுள்ளார். ஸ்மித் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றாலும், ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால், ஸ்மித் ஆடும் லெவனில் எங்கே களமிறங்குவார் என்பது கேள்க்குறியாகவே உள்ளது.
ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து இலங்கை மற்றும் ஓமன் அணிகளுடன் மோத உள்ளது. கேப்டன் மார்ஷ் எப்போது குணமடைவார் என்பது தெரியாத நிலையில், ஸ்மித்தின் வருகை அணிக்கு புதுத் தெம்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.