லக்னோ : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சென்றது.
ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் நெதர்லாந்தை விட கீழ்நோக்கி சென்றிருக்கிறது. இந்த நிலையில் தோல்விக்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்த தோல்வி அனைவர் மனதிலும் வலியை ஏற்படுத்தி விட்டதாக கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய அவர் தென்னாப்பிரிக்கா வீரர் குயின் டன் டிகாக் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர்கள் இருந்த நிலையிலிருந்து 311 ரன்கள் தான் எடுத்தார்கள் என்ற போது உண்மையிலே நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அந்த இலக்கை நிச்சயமாக துரத்த முடியும் என்று நினைத்தோம் .ஆனால் பேட்டிங் அவ்வளவு எளிதாக ஒன்றும் இல்லை.
தென்னாப்பிரிக்கா பவுலர்கள் பிரமாதமாக பந்து வீசினார்கள். இரவு நேரத்தில் பந்து வேகமாக எங்களை நோக்கி எகிறிது. இந்தத் தொடரில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் பேட்டிங் செய்கிறோமா? இரண்டாவது பேட்டிங் செய்கிறோமா என்பதை எல்லாம் மீறி வெற்றி பெறுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
இன்று இரவு நடந்த விஷயத்தை குறித்து தொடர்ந்து அதைப்பற்றி சிந்திக்க தேவையில்லை. எங்கள் வீரர்கள் மனதில் அனைவருக்குமே காயம் ஏற்பட்டு விட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நாங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்து அடுத்த போட்டியில் சிறப்பான ஒரு செயல்பாட்டை மேற்கொள்வோம்.
சில பிரச்சனைகள் அணியில் இருக்கிறது அதையும் சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு மைதானமும் ஒவ்வொரு மாதிரி செயல்படுகிறது அதற்குத் தகுந்தாற்போல் எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று ஆஸ்திரேலியா கேப்டன் கூறினார். வரும் திங்கட்கிழமை ஆஸ்திரேலியா தங்களது அடுத்த போட்டியில் இலங்கையை இதே லக்னோ மைனாதனத்தில் எதிர்கொள்கிறது.