கிரிக்கெட் போட்டிகள் ரத்து
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்டவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்
இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். பரபரப்பாக ஓய்வின்றி விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள், தற்போது வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களே அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். இதன்மூலம் தங்களுடைய ரசிகர்களுடன் தொடர்பில் அவர்கள் உள்ளனர். மேலும் வீட்டிலேயே பயிற்சிகளை மேற்கொண்டு தங்களை பிட்னெசில் வைத்துக் கொண்டுள்ளனர்.
பல்வேறு தரப்பினரும் கோரிக்கை
இந்நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் அற்ற விளையாட்டு மைதானங்களில் நடத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்மூலம் ரசிகர்களை ஏதாவது ஒருவகையில் திருப்தி படுத்த முடியும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜஸ்டின் லாங்கர் கோரிக்கை
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மூடிய அரங்கில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கரும் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் மற்றும் ரசிகர்களையும் திருப்தி படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்
கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட விருப்பப்படும் வீரர்களுக்கு இந்த போட்டிகள் மகிழ்ச்சியையே தரும் என்றும் லாங்கர் கூறியுள்ளார். இந்த போட்டிகள் தொலைகாட்சி மற்றும் ரேடியோக்களில் நேரடி ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள்
வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்வேறு விதங்களில் யோசித்து வருகின்றனர். எவ்வாறெல்லாம் இந்த இழப்பை ஈடுகட்டுவது என்பது குறித்து அவர்களிது யோசனை உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் இயான் மார்கன், ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களில் மோதுவதற்கும் இங்கிலாந்து அணி தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.