உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது.
பொதுவாக சென்னை என்றாலே வெயிலுக்கு பெயர் பெற்ற ஊராகும். இங்கு விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் பலர் ஆடுகளத்தை பார்த்து பயப்படுகிறார்களோ இல்லையோ சென்னையின் வெயிலை பார்த்து நிச்சயம் பயந்தே ஆக வேண்டும்.

இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் சென்னையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சென்னையில் தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் இன்றைய ஆட்டம் பாதிக்கப்படுமா என ரசிகர்கள் நினைத்தனர். இதனால் அக்டோபர் மாத வெயிலை நினைத்து பயப்படத் தேவையில்லை என வீரர்கள் நினைத்தனர்.
ஆனால் நம்ம சென்னைக்கு தான் வெயிலுக்கென்று தனி காலமே கிடையாதே. எந்த நாட்களும் வேண்டுமானாலும் சரி சென்னையில் வெயில் வெளுத்துக் கட்டும். மேலும் ஈரப்பதமும் காற்றில் குறைவாக இருப்பதன் காரணத்தினால் வெயில் குறைவாக அடித்தாலே அந்த வெப்பத்தை தாங்க முடியாது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது வெயிலின் உக்கிரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆறு ஓவர் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் வியர்வை தாங்க முடியாமல் தொடர்ந்து தண்ணீர் குடிக்க நடுவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தனர். குறிப்பாக விக்கெட் விழும்போதெல்லாம் ஆஸ்திரேலிய அணியின் உதவியாளர்கள் தண்ணீர் பாட்டிலையும் பெரிய துண்டையும் எடுத்து வந்து வீரர்களை ஆசுவாசப்படுத்தினர்.
இந்த வெயிலில் விளையாட டேவிட் வார்னர், ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் தடுமாறினர். அதையும் மீறி அவர்கள் பௌண்டரிகள் ரன்கள் ஓடி எடுத்தனர். இதை பார்த்ததும் இந்திய ரசிகர்கள் அக்டோபர் மாதத்திற்கு இப்படி என்றால் மே மாதத்தில் விளையாடி இருந்தால் என்ன ஆகி இருப்பீர்கள் என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.