அகமதாபாத் : சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் வீரர் என்றால் அது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தான். தன்னுடைய அதிரடி ஆக்ரோஷமான ஆட்டத்தால் எதிரணியை நிலை குலைய வைக்கும் டேவிட் வார்னர் சண்டை என்றால் முதல் ஆளாக நிற்பார்.
டேவிட் வார்னர் கோபமாக எதிரணி வீரர்களை திட்டுவது, உணவு விடுதியில் ரசிகர்கள் ஒருவருக்கு குத்து விட்டது என பல சர்ச்சைகளை சிக்கியிருக்கிறார். இப்போதும் கூட டேவிட் வார்னர் பேட்டிங் செய்யும்போது ஒரு எரிமலை வெடிப்பது போலவே இருக்கும்.

அதுவும் சதம் அடித்து விட்டால் அவர் ஆர்ப்பரிப்பதை பார்த்து பந்துவீச்சாளர்களுக்கே சில நேரம் கலக்கம் ஏற்படும். அந்த வகையில் டேவிட் வார்னர் ஒரு அசுரத்தனமான வீரராக விளங்குகிறார். இந்த நிலையில் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்ற பாடல் வரிக்கு ஏற்றார் போல் டேவிட் வார்னருக்கு இன்னொரு முகமும் இருக்கின்றது. அது ஒரு குடும்பத்தில் இருக்கும் பாசமான தந்தைக்கு இருக்கும் முகம். மகளுக்கு வேண்டியது எல்லாம் செய்யும் தந்தை, ரசிகர்கள் கேட்டால் நடனம் ஆடுவது, புஷ்பா ஸ்டைல் செய்வது என பல முகங்கள் இருக்கிறது.
அந்த வகையில் டேவிட் வார்னர் தற்போது அகமதாபாத்தில் இருக்கிறார். அப்போது வார்னர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வெளியே தெரு நாய்கள் இருந்தது. தெருநாய்களை பார்த்ததும் டேவிட் வார்னர் அதற்கு தண்ணீர் வழங்கி அதன் தாகத்தை தீர்த்தார். டேவிட் வார்னர் தண்ணீர் கொடுத்தவுடன் அந்த நாய் அவரை சுற்றி சுற்றி வந்தது. வெயிலின் தாக்கத்தால் தெரு நாய்கள் தண்ணீருக்காக கஷ்டப்படும் என உணர்ந்த டேவிட் வார்னர் தாம் வைத்திருந்த தண்ணீரை எடுத்து நாய்களுக்கு வழங்கிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
வார்னருக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா என்று அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதேசமயம் டேவிட் வார்னர் தெருநாய்களுடன் விளையாடும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அதே அகமதாபாத்தில் கடந்த வாரம் தான் ஒரு துயர சம்பவம் நாய்களால் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி டேவிட் வார்னருக்கு சில ரசிகர்கள் எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள்.