மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக கருதப்படும். நீங்கள் எவ்வளவு திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் 30 வயதுக்கு மேல் தான். தேசிய அணியில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இடம் கிடைக்கும்.
மைக்கேல் ஹசி போன்ற வீரர்கள் எல்லாம் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருந்தார்கள். அப்படி இருக்கும் போது சில வீரர்கள் மட்டுமே 20 வயதில் எல்லாம் தேசிய அணியில் விளையாட வாய்ப்பு பெறுகின்றனர். அப்படி கிடைக்கும் வீரர்கள் உச்சபட்ச திறமை வாய்ந்த வீரராக புகழப்படுவார்கள்.

அப்படி அறியப்பட்டவர் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வில் பொக்கோஸ்கி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும்.
அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது. தன்னுடைய திறமை காரணமாக 22 ஆவது வயதில் வில் பொக்கோஸ்கி இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21 ஆம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62 ,இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார்.
ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. ஷார்ட் பாலை எதிர்கொள்வதற்கான யுத்தி இல்லையென்றால் நான் பந்து தலையில் படும். ஆனால் இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்த மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி பேட்டை கையிலே பிடித்து விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இதனை அடுத்து வில் பொக்கோஸ்கி கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாகவும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதனால் வில் பொக்கோஸ்கி தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விக்டோரியா நிர்வாகி மோரிஸ், சில மருத்துவ குழு நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை. அவர் பயிற்சி செய்ய கடந்த மூன்று மாதங்களாக வரவில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கின்றார். மருத்துவர்களின் அறிக்கை எங்களுக்கு எந்த ஒரு ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை என்று மோரிஸ் கூறியிருக்கிறார்.