இந்தூர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திடீரென கேப்டன் பாட் கம்மின்ஸ் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வு அளித்தது. முக்கிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இதுவரை இந்த தொடரில் களமிறங்கவில்லை. இது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
உலகக்கோப்பைக்கு முன் மற்ற வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என கூறினாலும், ஆஸ்திரேலிய அணி வேறு ஒரு திட்டத்தோடுதான் இதை செய்துள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் அக்டோபர் 7 அன்று நடைபெறும் போட்டியில் மோத உள்ளன. இரு அணிகளுக்கும் அதுதான் உலகக்கோப்பை லீக் சுற்றில் முதல் போட்டி.
அதற்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தங்கள் வீரர்களை தயார் செய்யும் வகையில் மோதி வருகின்றன. இந்த தொடரில் வெல்வதை விட உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெல்வது தான் முக்கியம்.

அதை கருத்தில் கொண்ட ஆஸ்திரேலிய அணி தங்களின் முழு பலத்தை வெளிப்படுத்தும் அணியுடன் ஆடாமல், உலகக்கோப்பை தொடரில் இடம் பெறாத பிற வீரர்களை வைத்து ஆடி வருகிறது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்களின் தற்போதைய பலம், பலவீனம் குறித்து இந்திய அணி சரியாக புரிந்து கொள்ள முடியாது.
ஆஸ்திரேலிய ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது போட்டியிலும் பலம் குறைந்த அணியுடன் களமிறங்கி இருக்கிறது. அந்த வகையில், இந்திய அணியை ஏமாற்றும் ஒரு முயற்சியாகவே இது உள்ளது.
ஆஸ்திரேலியாவின் பலம் என்ன என்றே தெரியாமல் தான் இந்திய அணி முதல் போட்டியில் ஆட வேண்டும். ஆனால், இது ஆஸ்திரேலிய அணிக்கு பாதகமாகவும் முடியலாம். அந்த அணியில் மிட்செல் ஸ்டார்க் பல மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடவே இல்லை. அவர் எந்த நிலையில் பந்து வீசுவார், உடற்தகுதி சரியாக இருக்கிறதா என்பதே தெரியாமல் தான் அவர் உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும்.