மொகாலி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் போட்டியை விட்டு வெளியேறியது.
6-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர்-10 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்டை நடத்தின.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இரு அணிகளும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு ஆரோன் பின்சும், உஸ்மான் கவாஜாவும் தொடக்கம் தந்தனர். கவாஜா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆரோன் பின்ச் 15 ரன்கள் எடுத்திருந்த போது இமாத் வாசிம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் வார்னர் 9 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.
இதனை அடுத்து மேக்ஸ்வெல்லும், கேப்டன் சுமித்தும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனை அடுத்து நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வாட்சன் களமிறங்கினார். வாட்சனும் சுமித்தும் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 193 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக சுமித் 61 ரன்களும், வாட்சன் 44 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ் மற்றும் இமாத் வாசிம் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பால்க்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி வருகிற 27 -ம் தேதி இந்தியாவுடன் பலப்பரீட்டை நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.