டி20 உலக கோப்பை தொடரிலிருந்து முன்னாள் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருக்கிறது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இம்முறை பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது.
ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு அந்த அணியின் முக்கிய வீரர்களான பேட் கம்மின்ஸ், ஹேசல் வுட் உள்ளிட்ட வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் அணியில் இருந்த கேப்டன் மிட்செல் மார்ஸ், டிம் டேவிட் உள்ளிட்ட வீரர்களுக்கும் சில காயங்கள் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வே விடம் தோல்வியை தழுவியது. இது குரூப் பி பிரிவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இலங்கைக்கு எதிராக நேற்று ஆஸ்திரேலிய அணி பாலக்கல்லேவில் பலப்பரிட்சை நடத்தியது.
இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. ஆனால் அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் குவித்தும் அந்த இலக்கை இலங்கை அணி 18 வது ஓவரிலேயே எட்டி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதனால் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் ஜிம்பாப்வே அணி தாங்கள் விளையாடப் போகும் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த தருணத்தில் இலங்கையின் பாலக்கல்லேவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த இருந்தது. ஆனால் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்பட முடியாத நிலை தொடந்தது. இதனால் டாஸ் கூட போடப்படவில்லை. இதன் காரணமாக ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி ஐந்து புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் ஒரு போட்டி தான் இருக்கிறது. அதில் வெற்றி பெற்றாலும் அவர்களால் நான்கு புள்ளிகள் வரை தான் பெற முடியும். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி தொடரை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருக்கிறது. இதன் மூலம் ஜிம்பாப்வே சூப்பர் 8 தகுதி பெற்றுள்ளது.
இதனை அடுத்து ஜிம்பாபே அணி சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுடன் சென்னையில் பல பரிட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவுக்கு பதில் ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு வந்திருப்பது இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணி தகுதி பெறவில்லை. ஆனால் தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் அடுத்த 2028 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.