மொஹாலி : உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் முன் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தது. அதை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதல் இடத்தை இழந்துள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. அத்துடன் உலகக்கோப்பைக்கு செல்லும் முன் நம்பர் 1 அணி என்ற பெயருடன் ஆஸ்திரேலியா செல்லும் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், இப்போது இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அந்த தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக இந்திய அணி, பாகிஸ்தான் அணியை ஆசிய கோப்பையில் வீழ்த்தி அந்த அணியின் நம்பர் 1 இடத்தை பறித்தது. அதன் காரணமாகவே ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தை பிடிக்க முடிந்தது.
தற்போது இந்திய அணி, ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி உலகக்கோப்பைக்கு நம்பர் 1 அணி என்ற பெயருடன் செல்ல உள்ளது.
மொஹாலியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 276 ரன்கள் குவித்தது. இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 300 ரன்களை குவித்தாலே வெற்றி பெறுவது கடினம். ஆனால், ஆஸ்திரேலியா பேட்டிங்கில் தடுமாறி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா அடுத்து சேஸிங் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில், கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினர்.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவை சந்தித்தது. அந்த தொடரை 2 - 3 என்ற கணக்கில் இழந்தது ஆஸ்திரேலியா.
தற்போது இந்திய அணிக்கு எதிராக முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது. இந்த தொடர் தோல்விகள் உலகக்கோப்பையில் அந்த அணியை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்து நடக்க உள்ள இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனநிலையில் ஆடும் என எதிர்பார்க்கலாம்.