ஆக்லாந்து: உலக கோப்பையை இணைந்து நடத்தும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரிட்சை நடத்த உள்ளன. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நாடுகள் என்ற எதிர்பார்ப்பு கொண்டவை இவ்விரு அணிகளும்தான் என்பபதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது இந்த போட்டியின் மீது.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்திவருகின்றன. இவ்விரு அணிகளுமே ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இதில், நியூசிலாந்து ஏற்கனவே இலங்கை, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தளவில், இங்கிலாந்தை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனவே ஒரு புள்ளிதான் கிடைத்தது.
இவ்விரு அணிகளும் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தொடங்க உள்ள போட்டியில் மோத உள்ளன. உள்ளூர் சப்போர்ட் நியூசிலாந்துக்கு பலமாகும். ஆனால் அந்த அணியின் பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட ஒரு சில பேட்ஸ்மேன்களை தவிர்த்து பிற வீரர்கள் நெருக்கடி நேரத்தில் அடுத்தடுத்து அவுட் ஆகுவது தொடர் கதையாகிவருகிறது. பவுலிங்கில் சவுத்தி கலக்குகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதே நேரம் 4 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவோ, அனைத்து பிரிவுகளிலும் மிகவும், பலமாக உள்ளது.
இரு நாட்டு மீடியாக்களுமே இவ்விரு அணிகள் மோதும் போட்டியை உலக கோப்பை இறுதி போட்டியைப் போன்று வர்ணித்து ஹைப் ஏற்றி வருகின்றன. பலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.