மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரே சூர்யகுமார் யாதவிற்கு கடைசி வாய்ப்பாக அமையும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்திய டி20 அணியின் சூப்பர் ஸ்டார் வீரர் சூர்யகுமார் யாதவ். டி20 கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும் அலசி ஆராய்ந்து நம்பர் 1 வீரராக விளையாடி வருபவர். டி20 கிரிக்கெட்டில் எந்த மைதானம், எந்த சூழலில், எந்த அணிக்கு எதிராகவும் சூர்யகுமார் யாதவ் விஸ்வரூபம் எடுக்கக் கூடியவர். ஆனால் அதே ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை சூர்யகுமார் யாதவிற்கு கைகூடவே இல்லை.

இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 25 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 24.41 சராசரியுடன் 537 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இவருக்கு மட்டும் இந்திய அணி நிர்வாகமும், கேப்டன் ரோகித் சர்மாவும் எண்ணற்ற வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். ஆனால் அத்தனை வாய்ப்புகளிலும் சூர்யகுமார் யாதவ் சொதப்பியுள்ளார்.
இதனிடையே சூர்யகுமார் யாதவை உலகக்கோப்பை அணியில் இந்திய அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. மிடில் ஆர்டர் வீரராக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பார்த்தால், கீழ் வரிசையில் ஃபினிஷர் ரோலுக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் டி20 இன்னிங்ஸை போலவே கடைசி 40 பந்துகளில் எப்படி விளையாடுவாரோ, அப்படியான ஆட்டத்தையே அவரிடம் எதிர்பார்ப்பதாகவும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இதனிடையே சூர்யகுமார் யாதவ் வலைபயிற்சியின் போது சுழற்பந்துவீச்சாளராகவும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சும் சோதிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் 3 முதல் 4 ஓவர்கள் வரை வீசினாலே போதுமானது என்று பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கடந்த முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். இதனால் இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூர்யகுமாரின் ஆட்டம் சோதிக்கப்படும். இம்முறையும் சூர்யகுமார் யாதவ் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை அணியில் மாற்றம் செய்ய செப்.28ஆம் தேதியே கடைசி நாளாகும்.
இதனால் சூர்யகுமார் யாதவ் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் பேக் அப் தொடக்க வீரர், பேக் அப் விக்கெட் கீப்பர், பேக் அப் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று அத்தனை ரோலையும் இஷான் கிஷன் சிறப்பாக் செய்கிறார். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயரும் பேக் அப் மிடில் ஆர்டர் வீரராக இருப்பதால், இருவரையும் ஒரே ரோலுக்கு இந்திய அணி நிர்வாகம் வைத்திருக்காது என்று பார்க்கப்படுகிறது.