பெங்களூர் : உலகிலேயே மிக அதிக வயதில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார் இந்தியாவின் ரோகன் போபண்ணா. அவரது வெற்றியில் அவரது மனைவி சுப்ரியா அண்ணையாவின் பங்கும் மிக அதிகம். அவரும் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியை காண வந்திருந்தார்.
அவரை தொலைக்காட்சியில் அடிக்கடி காட்டியதை பார்த்த டென்னிஸ் ரசிகர்கள் அப்போதே இவர் யார்? என தேடத் துவங்கி விட்டனர். ஒரு வகையில் ரோகன் போபண்ணா 43 வயதில் டென்னிஸ் உற்சாகமாக டென்னிஸ் ஆடவும் அவர் தொழில் ரீதியாக காரணமாக இருக்கிறார். எப்படி தெரியுமா?

சுப்ரியா அண்ணையா ஒரு உளவியல் நிபுணர் மற்றும் ஊடகவியலாளர் ஆவார். அதன் காரணமாக அவரால் விளையாட்டில் ரோகன் போபண்ணாவின் மன அழுத்தத்தை புரிந்து கொள்ள முடிந்ததோடு, ஒரு சமயம் அவர் தொடர் தோல்விகளால் துவண்டு, டென்னிஸில் இருந்து ஓய்வு பெரும் மன நிலையில் இருந்த போது, அவரைத் தேற்றி மீண்டும் களத்துக்கு வர வைத்தார்.
இப்படி ஒரு மனைவி இருந்ததால் தான் ரோகன் போபண்ணா வெற்றிகரமாக தன் 43வது வயதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதல் இடத்தை பெற்றதோடு, ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லவும் முடிந்தது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் மேத்யூ எப்டன் உடன் இணைந்து ஜோடியாக ஆடிய ரோகன் இறுதிப் போட்டி வரை முன்னேறி, இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று இருக்கிறார். அவரது மனைவி அவருக்கு ஆறுதலாக களத்தில் இருந்தது பலரையும் கவர்ந்தது. இவர்களது காதல் கதையும் மிகவும் சுவாரசியமானது.
பெங்களூரில் வசித்து வந்த ரோகன் போபண்ணா ஒருமுறை தன் உறவினர் ஒருவருடன், அவரது நண்பர்களுடன் உணவகத்துக்கு சென்ற போது அங்கே சுப்ரியாவை பார்த்துள்ளார். அவரால் ஈர்க்கப்பட்ட ரோகன், தன்னை, சுப்ரியாவுக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கூறி இருக்கிறார். அந்த அறிமுகத்துக்கு பின் இருவரும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சிறிது காலம் எடுத்துக் கொண்டனர். அதன் பின் அவர்களுக்கு திருமணம் நடந்தது. அவர்களுக்கு திரைதா என்ற மகள் இருக்கிறார்.