பெர்த்: முத்தரப்பு கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இங்கிலாந்தை 112 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது.
ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, மேக்ஸ்வெல்லின் பொறுப்பான ஆட்டத்தால் மீண்டு, வெற்றியையும் பறித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இதில் 15 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும், 9 புள்ளிகளுடன் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஒரு வெற்றியும் பெறாத இந்தியா வெளியேறியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெர்த் நகரில் இன்று நடைபெற்றது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் வேகப்பந்து வீச்சு தான் தாறுமாறாக எடுபட்டும் என்பதால், டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பிஞ்ச் 3 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய 12 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பெய்லியும் 2 ரன்களில் அவுட் ஆனார்.
ஸ்டீவன் ஸ்மித் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது ஆஸ்திரேலியா 18வது ஓவரில் 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் ஐபிஎல் ஹீரோவான கிளென் மேக்ஸ்வெல்லும், மிட்சேல் மார்ஷும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 98 பந்துகளில் 95 ரன்களை குவித்த மேக்ஸ்வென், பிராட் பந்து வீச்சில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
மார்ஷ் 60 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். பிராட் ஹட்டின் 9 ரன்களில் அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு, 278 ரன்களை குவித்தது. 8வது விக்கெட்டாக களமிறங்கிய ஜேம்ஸ் பாக்னர் 24 பந்துகளில் அதிரடியாக 50 ரன்களை குவித்து, இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஆன்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து துரத்தலை தொடங்கியது. ஸ்டார்க்கின் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி அதிரடியை தொடங்கிய இயான் பெல், ஹசில்வுட் பந்து வீச்சில் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களில் அவுட் ஆனார். ஜேம்ஸ் டெய்லர், ஜான்சன் பந்து வீச்சில் மேக்ஸ்வெல்லின் சிறப்பான கேட்சால் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஜோ ரூட் 25 ரன்கள், மொயின் அலி 26 ரன்கள் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி கேப்டன் இயோன் மோர்கன் சந்தித்த முதல் பந்திலேயே, ஜான்சனின் வேகத்தில் போல்ட் ஆனார்.
சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் இங்கிலாந்து அணி 39.1 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே, 112 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இங்கிலாந்து தரப்பில் ரவி போபாரா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில், மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடரில், இந்தியாவுக்கு எதிரான போட்டி டிரா கண்ட நிலையில், எந்த ஒரு போட்டியிலும் தோல்வியே காணாமல் ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.