லண்டன்: ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் பயிற்சியின் போது, பவுலர் தலையில் பந்தை வேகமாக அடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 30ம் தேதி தொடங்கி, பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆரோன் பின்ச், வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நீண்ட நேரம் வலைப் பயிற்சியில் இறங்கினர். பயிற்சியின்போது டேவிட் வார்னருக்கு ஓவல் மைதானத்தில் உள்ள ஒரு வலைப்பயிற்சி பந்து வீச்சாளர் பந்து வீசி கொண்டிருந்தார்.
நன்றாக ஆடிக்கொண்டிருந்த வார்னர் ஒரு பந்தை விரட்டியடித்தார். அந்தப் பந்து எதிர்பாராத விதமாக பந்துவீச்சாளரின் தலையை பலமாக தாக்கியது. உடனே பந்துவீச்சாளர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் ஜெய்கிஷன் பிளாஹா என்பதாகும்.
பதறிப்போன வார்னர், அந்த பந்து வீச்சாளரை தேற்றினார். பின்னர் ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர் விரைந்து வந்து அப்பந்துவீச்சாளருக்கு தேவையான முதலுதவியை செய்தார். பின்னர், அந்த பந்துவீச்சாளரை ஸ்ட்ரெச்சரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோனிக்கு பதிலடி..? லீக்கான பாக். ரகசிய திட்டம்..?
பயிற்சிக்கு பின்னர் அணிக் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியதாவது: டேவிட் வார்னர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். எதிர்பாராதவிதமாக அவர் அடித்த பந்து, பவுலரின் தலையை தாக்கியது. சிறிது நேரத்திற்கு பயிற்சி தடைபட்டது. பின்னர் நிலைமை சீரானது என்று கூறினார்.