மும்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைவதற்குள்ளாகவே, இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி, சனிக்கிழமை அன்று தேர்வு செய்யப்பட்டது. இந்த அணியில் மூன்று முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை.
காயம் காரணமாக இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளனர். 2025 ஆசிய கோப்பை தொடரின்போது ஹர்திக் பாண்டியாவுக்குத் தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

அதேபோல, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ரிஷப் பண்ட்டிற்கு கால்விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால், இந்த 8 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த இருவரின் விலகல் ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் பணிச்சுமை குறித்து தேர்வுக்குழு தீவிரமாக ஆலோசித்தது. அவர் தொடர்ந்து ஆசிய கோப்பை மற்றும் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் என ஓய்வின்றி விளையாடி வருகிறார்.
அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 14 ஆம் தேதி வரை நீடித்தால், அதன்பிறகு ஐந்தே நாட்களில் ஆஸ்திரேலியாவில் முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த மிகக் குறுகிய கால இடைவெளி, ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் சூழல் மற்றும் நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரும் வரவிருப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பும்ராவுக்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வவு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் அவர் ஆஸ்திரேலிய டி20 தொடரில் இடம் பெற்று இருக்கிறார்.
இந்தச் சவால்களுக்கு மத்தியில், இந்திய ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தியும் கிடைத்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் திரும்பி உள்ளனர். அவர்களின் ஒருநாள் போட்டியின் எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருவரும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 19, 23, மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரையிலும் நடைபெறவுள்ளது. எனவே, காயங்கள், பணிச்சுமை மற்றும் சீனியர்களின் கம்பேக் என ஒரு கலவையான சூழலில் இந்திய அணியின் தேர்வு அமைந்துள்ளது.
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்