பெர்த்: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கினைத் துவங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி இன்று காலை மணிக்குத் தொடங்குகியுள்ளது. இவ்விரு அணிகளும் ஒருநாள் போட்டியில் கடைசியாக, உலகக்கோப்பை அரையிறுதியாட்டத்தில் விளையாடின. 10 மாத இடைவேளைக்கு பின்னர் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை, உலகக்கோப்பையில் விளையாடிய மைக்கெல் கிளார்க், ஜான்சன், ஹேடின், ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்,காயம் காரணமாக தொடரில் இடம்பெறவில்லை. ஆல் ரவுண்டரான ஷேன் வாட்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் ஸ்மித் தலைமையில் இளம் வீரர்கள் பலருடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது. பாரீஸ், போலண்ட் ஆகிய இளம் வீரர்களுக்கு முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் டோணிதலைமையிலான இந்திய அணி ரோகித் ஷர்மா, தவான், கோஹ்லி உள்ளிட்ட வீரர்களுடன் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் புதிய வரவாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான பரீந்தர் சரண் இணைந்துள்ளார். அவர் இன்றைய தொடரில் களமிறங்கியுள்ளார். அவருக்கு கேப்டன் டோணி தொப்பியை வழங்கி அணிக்குள் சிறப்பான வரவேற்பினை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.