மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு புதிய தண்டனை ஒன்றை அறிவித்து இருக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தேர்வுக் குழு தலைவர் முகமது ஹபீஸ்.
பொதுவாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்புவது, கேட்ச்சுகளை நழுவ விடுவது, ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விடுவது என மோசமாக செயல்படுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் நிறைய கேட்ச் வாய்ப்புகள் மற்றும் ஃபீல்டிங்கில் ரன்களை கட்டுப்படுத்தும் வாய்ப்புகளை அந்த அணி கோட்டை விட்டது.

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றுமே சொதப்பலாக இருந்தது. இந்த நிலையில், ஃபீல்டிங் செய்யும் போது கீழே விழுந்தால் அடிபட்டு விடும் என கீழே விழுந்து ஃபீல்டிங் செய்யாமல் தவிர்ப்பது, ஓடுவதற்கு சோம்பேறித்தனப்பட்டு பந்தை பவுண்டரிக்கு விடுவது, கேட்ச் பிடிக்கும் போது குழப்பம் ஏற்படுத்தி கேட்சுகளை கோட்டை விடுவது என மோசமாக செயல்படும் வீரர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தார் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக் குழு தலைவருமான முகமது ஹபீஸ்.
இனி எந்த வீரராவது பீல்டிங்கில் சொதப்பினால் 500 டாலர் (ரூ.41,500) அபராதம் விதிக்கப்படும் என ஹபீஸ் அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பள்ளிக்கூட சிறுவர்கள் போல செய்யும் தவறுக்கு அபராதம் விதிக்கப்படும் அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நிலைமை மாறி இருக்கிறது. இந்த விஷயத்தால் பாகிஸ்தான் வீரர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. அந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கூட டேவிட் வார்னர் கொடுத்த கேட்ச் ஒன்றை கோட்டை விட்டது. எனினும், அவர் விரைவில் ஆட்டமிழந்ததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. முதல் நாள் மழையால் போட்டி தடைப்பட்டு நடந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 66 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.