சிட்னி : ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர் தன் கிரிக்கெட் வாழ்வின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கும் நிலையில், அவரது பையை யாரோ ஒருவர் திருடிய சம்பவம் நடந்துள்ளது.
தற்போது ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது. அதற்காக மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சென்ற போது இடையே அவரது பை காணாமல் போயுள்ளது.

அந்தப் பையில் டேவிட் வார்னரின் டெஸ்ட் போட்டிகளில் அணியும் தொப்பி உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக அளிக்கப்படும் பச்சை நிற தொப்பி அவர்களுக்கு மிகப் பெரும் கவுரவமான ஒன்று.
திருடப்பட்ட அந்த பையில் அவரது இரண்டு பச்சை நிற தொப்பி உள்ளது. அதில் ஒன்று அவருக்கு முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது அளிக்கப்பட்டது. அதை அணிந்து தன் கடைசி போட்டியில் ஆட வேண்டும் என நினைத்து இருந்த வார்னர் தற்போது சோகத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில், அவர் தனது பையை திரும்ப ஒப்படைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். "என் லக்கேஜில் இருந்து என் பையை யாரோ ஒருவர் எடுத்து இருக்கிறார்கள். அதில் என் குழந்தைகளுக்கு வாங்கிய சில பரிசுப் பொருட்கள் உள்ளன. அதில் தான் என் பச்சை நிற தொப்பியும் உள்ளது. அது எனக்கு உணர்வுரீதியான ஒன்று. என் கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறேன்." எனக் கூறி இருக்கிறார்.
மேலும், "உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது." என முகம் தெரியாத திருடனிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார் வார்னர்.