மெல்போர்ன் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய இயக்குனர் முகமது ஹபீஸ் பேசிய தற்பெருமை பேச்சை, சமூக வலைதளத்தில் மிக மோசமாக கிண்டல் செய்து இருக்கிறது கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்து.
பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. இதற்கு முன் 1995இல் தான் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்று இருக்கிறது. அதன் பின் அங்கே ஆடிய 16 போட்டிகளில் ஒன்றைக் கூட பாகிஸ்தான் அணி வெல்லவில்லை.

இந்த நிலையில், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி போராடி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் சில அம்பயர் முடிவுகள் சர்ச்சையானது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டிஆர்எஸ் முடிவு அமைந்தது. மற்றொரு முறை பேட்ஸ்மேன் கை உறையில் பந்து பட்டதாக கூறி அவுட் தரப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது போட்டி முடிந்த பின் பேசிய அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை விட பாகிஸ்தான் அணியே சிறப்பாக ஆடியது என்றும், அம்பயர்கள் மற்றும் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் உள்ள பிரச்சனைகள் காரணமாக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது எனவும் கூறி இருந்தார்.
அவரது இந்த பேச்சு குறித்து ஊடகத்திடம் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், "அப்படியா சூப்பர்.. ஆனால் நங்கள் ஜெயித்து விட்டோம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் முக்கியம்" எனக் கூறி கிண்டல் அடித்து இருந்தார். இது போதாது என ஐஸ்லாந்து கிரிக்கெட் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில், ஒரு கிண்டல் பதிவு வெளியானது.
அதில், "ஒரு திறமையான, ஆதிக்கம் செலுத்தும் அணி ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 16 போட்டிகளில் தோற்று இருக்கிறது. நிச்சயம் அதிர்ஷ்டம் வாய்ந்த ஆஸ்திரேலியா விரைவில் தான் அதிர்ஷ்டத்தை இழக்கும்" எனக் கூறி இருந்தது. அதாவது பாகிஸ்தான் அணி திறமையான அணி என்றால் ஏன் கடந்த 28 ஆண்டுகளில் 16 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை என கிண்டல் அடித்து இருந்தது.
ஐஸ்லாந்து கிரிக்கெட் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் இது போன்ற கேலி, கிண்டல் பதிவுகள் அதிக அளவில் இடம் பெறும். ஐஸ்லாந்து கிரிக்கெட் அணியைப் பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கு தெரியாத போதும், அந்த அணியின் ட்விட்டர் பக்கம் பற்றி தெரியும். அந்த அளவுக்கு மற்ற அணிகளை கிண்டல் செய்வதில் சிறந்து விளங்கி வருகிறது ஐஸ்லாந்து.
இந்திய அணி குறித்தும் பல முறை ஐஸ்லாந்து அணி கேலி, கிண்டல் செய்துள்ளது. ஒருமுறை சஞ்சு சாம்சன், சாஹல் ஆகியோர் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட போது, தங்கள் அணியில் வந்து சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து சிரிப்பை வரவழைத்து இருந்தது. சமீபத்தில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வேறு நாட்டுடன் இணைந்து நடத்தக் கூடும் என செய்திகள் வெளியான நிலையில் தங்கள் நாடு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்த தயாராக இருப்பதாக ஐசிசி-க்கு கடிதம் எழுதியது. ஐஸ்லாந்து நாட்டில் ஒரு உருப்படியான கிரிக்கெட் மைதானம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் அந்த கடித்ததில் குறிப்பிட்டு தங்களை தாங்களே கேலி செய்து கொண்டு இருந்தது ஐஸ்லாந்து கிரிக்கெட் அமைப்பு.