மெல்போர்ன் : ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாட் கம்மின்ஸ் ஒரே பந்தில் பவுண்டரி அடிக்காமல் 5 ரன் எடுத்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர்கள் வழக்கம் போல ஃபீல்டிங்கில் சொதப்பவே அதை பயன்படுத்தி பாட் கம்மின்ஸ் 5 ரன் சேர்த்தார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறி உள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் ஓரளவு போராட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 264 ரன்கள் சேர்த்தது.
இரண்டாவது இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 262 ரன்கள் சேர்த்தது. அப்போது பாட் கம்மின்ஸ் 75வது ஓவரில் பேட்டிங் செய்த போது ஆமீர் ஜமால் வீசிய பந்தை கவர் திசையில் தட்டி விட்டு 2 ரன்கள் ஓடினார். அப்போது ஃபீல்டர் பந்தை எடுத்து பந்துவீச்சாளர் முனைக்கு வீசினார். அங்கே நின்று இருந்த ஷஹீன் அப்ரிடி பந்தை சரியாக பிடிக்கவில்லை.
இதை அடுத்து பந்து மீண்டும் பவுண்டரி எல்லையை நோக்கி ஓடியது. அதை பிடிக்க மற்றொரு ஃபீல்டர் ஓடினார். இந்த இடைவெளியை பயன்படுத்தி பாட் கம்மின்ஸ் - அலெக்ஸ் கேரி மேலும் 3 ரன்கள் சேர்த்தனர். இதை அடுத்து ஒரே பந்தில் பவுண்டரி அடிக்காமல் 5 ரன்கள் சேர்த்தார் பாட் கம்மின்ஸ்.
பின்னர் பாகிஸ்தான் அணி 317 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய போது 237 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இதை அடுத்து ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.