லக்னோ : 2023 உலகக்கோப்பையில் முதல் அணியாக பெரும் ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நான்கு கேட்ச்களை நழுவ விட்டது.

அது மட்டுமின்றி பல பீல்டிங் சொதப்பல்களை செய்து தென்னாப்பிரிக்க அணிக்கு ரன்களை வாரி வழங்கியது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் மிக குறைவான கேட்ச் பிடிக்கும் திறன் கொண்ட அணி என்ற பெயரை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக ஆடி உள்ள ஆஸ்திரேலிய அணி 54 சதவீத கேட்ச்களை மட்டுமே பிடித்துள்ளது. 46 சதவீத கேட்ச்களை கோட்டை விட்டுள்ளது. உலகிலேயே சிறந்த பீல்டிங் அணி என்ற பெயர் பெற்ற ஆஸ்திரேலிய அணி இப்படி ஒரு பெயரை பெற்றதை நம்ப முடியாமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி கொடுத்த எளிய கேட்ச்சை கோட்டை விட்டார் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ். அதனாலேயே ஆஸ்திரேலியா அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது.
அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 13வது ஓவரில் டெம்பா பவுமா கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் நழுவ விட்டார். அடுத்து 30வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய ஓவரில் மார்கிரம் கம்மின்ஸ் இடமே பந்தை அடித்தார். அந்த கேட்ச்சை கம்மின்ஸ் கோட்டை விட்டார்.
அடுத்து 49வது ஓவரில் பல சம்பவங்கள் நடந்தன. கம்மின்ஸ் பந்து வீசிய அந்த ஓவரில் இரண்டாவது பந்து மற்றும் நான்காவது பந்தில் இரண்டு கேட்ச்களை கோட்டை விட்டது ஆஸ்திரேலியா.
அதே ஓவரில், முதல் பந்தில் மிஸ் பீல்ட் செய்யவே 2 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா. மூன்றாவது பந்தில் ஜான்சென் தவறான பீல்டிங்கால் ஒரு ஃபோரை கோட்டை விட்டார். இந்த ஓவரை தவிர பல முறை மிஸ் பீல்ட் செய்தது ஆஸ்திரேலியா.
இது ஆஸ்திரேலியா அணி தானா? என் ரசிகர்களுக்கு சந்தேகமே வந்து விட்டது. அந்த அளவுக்கு மோசமான பீல்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தியது அந்த அணி. இந்த மோசமான தோல்விகளில் இருந்தும், பீல்டிங் சொதப்பல்களில் இருந்தும் ஆஸ்திரேலியா மீளுமா? பார்ப்போம்.