மும்பை : 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் ஆக இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் இருக்கிறது. நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியா மண்ணில் 2014- 15 ஆம் ஆண்டு தொடரில் தான் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2018- 19 ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்திலும் 2020-21 ஆம் ஆண்டு சுற்றுப் பயணத்திலும் தொடர்ந்து இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா வென்று இருக்கிறது.

இந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி செல்கிறது. ஆனால் கடந்த இரண்டு தொடர்களில் இந்தியாவின் முக்கிய வீரராக இருந்த ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் தற்போதைய இந்திய அணியில் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் இந்தியாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது இருந்தே கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் கம்மின்ஸ், தாம் இந்திய டெஸ்ட் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகவே தற்போது எந்த தொடரும் பங்கேற்காமல் பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கிலாந்து அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு சென்று விளையாடிய போது எனக்கு பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து யோசனை வந்துவிட்டது. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும்.
நான் இந்த தொடர் மீதுதான் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கணிப்பு படி ஆஸ்திரேலிய அணி ஐந்துக்கு பூஜியம் என்ற கணத்தில் கைப்பற்றும். இந்த தொடரில் எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க வேண்டும். ஸ்மித், லாபஸ்சேன், டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்கள் எல்லாம் பெரிய சதங்களாக அடிக்க வேண்டும். எனக்கு எங்கள் அணி வீரர்கள் 101 ரன்கள் அல்லது 107 ரன்கள் அடிப்பதெல்லாம் போதாது. எனக்கு 180 ரன்கள்,இரட்டை சதம் ஆகியவை வேண்டும் என்று நாதன் லயான் தெரிவித்திருக்கிறார்.