மும்பை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்த ஆண்டின் இறுதியில் மோத உள்ளன. அந்த தொடர் குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்தியாவை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என கூறி இருந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடைசியாக நடந்த நான்கு பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியே தொடரைக் கைப்பற்றி இருக்கிறது. கடந்த நான்கு முறையும் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கிலேயே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள 2024 - 25 பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 3 - 1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என ரிக்கி பாண்டிங் கூறி இருக்கிறார்.

இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி பேசுகையில் ஆஸ்திரேலியர்கள் தங்களின் "மைண்ட் கேமை" ஆரம்பித்து விட்டார்கள் எனக் கூறி இருக்கிறார். அதாவது தொடருக்கு முன்பே இந்திய வீரர்களின் மனதில் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெறும் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க முயன்று வருகிறார்கள் என கூறி இருக்கிறார்.
"ஆஸ்திரேலியா 3 - 1 என வெற்றி பெறும் என ரிக்கி பாண்டிங் கூறி இருக்கிறார். அவர் மிகப் பெரிய வார்த்தையை சொல்லி இருக்கிறார். இதன் மூலம் ஆஸ்திரேலியர்கள் தங்களின் மைன்ட் கேமை ஆரம்பித்து விட்டார்கள். இதுபோன்ற வியூகங்களை இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நன்கு அறிவார்கள். கடந்த இரண்டு முறையும் இந்தியா தான் பார்டர் - கவாஸ்கர் தொடரில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த முறையும் அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆஸ்திரேலியர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் இது போன்ற பெரிய விஷயத்தை தொடருக்கு முன்பு சொல்வார்கள். ஆஸ்திரேலியாவால், இந்தியாவை 5 - 0 என்று கூட வீழ்த்த முடியும். ஆனால், இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் இல்லையென்றால் மட்டுமே அதை அவர்களால் செய்ய முடியும்." என்று கூறி இருக்கிறார் பாஸித் அலி.